Monday, May 14, 2007

கோடைகாலக்குறிப்பு 3

இந்த வருடவெயில் கடந்த 25 வருடங்களில் அடித்த வெயிலையும் விட அதிகம் என்று நண்பர் சொன்னார்.ஒவ்வொரு வருடமும் இதேதான் சொல்கிறோம் என்று இன்னொருவர் சொன்னார்.

நேற்று மின்சாரம் இல்லாத இரவைக்கடக்க நேர்ந்தபோது உலகத்தின் வெப்பம் உயர்ந்துவருவதை நானும் உணர்ந்தேன்.

ஒருமுறை படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்றிருந்தபோது அந்த மேற்குத்தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் நுழைந்ததும் குளிர் பரவுவதை உணர்ந்தேன்.அதற்கு காரணம் மரங்கள் என்று புரிந்தது.உடனே எனக்கு ஒரு ஆசை தோன்றியது.சென்னையை இப்படி குளிர் நகரம் ஆக்கமுடியுமா? மரங்கள் வளர்த்தால் சாத்தியம் எனில் எத்தனை லட்சம் மரம் வளர்க்கவேண்டும்?

சென்னையில் எல்லோரும் தொட்டிச்செடி வளர்ப்பதன் பின்னிருக்கும் இயலாமை புரிந்தது.புழுக்கம் நிறைந்த வாடகைவீட்டில் மரத்தை எங்கு வளர்ப்பது?

ஒருமுறை புத்தக வெளியீட்டு விழாவில் எல்லோருக்கும் பரிசாக சிறியமண் சட்டியில் மூங்கில் செடியைக்கொடுத்தார்கள்.அதை எங்கு வளர்ப்பது என்று தெரியாமல் வீட்டின் மூலையில் வைத்திருந்தேன். அது சீன வாஸ்து சாஸ்திரப்படி இங்குதான் வைக்கவேண்டுமென்று வீட்டுக்குவந்த நண்பர் சொன்னார்.

அதை இப்போது என் புத்தக அடுக்கின் அருகில் வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஆக்ஸிஜன் உருவாகும் என்று அதே நண்பர்தான் சொன்னார்.சென்னை முழுக்க மரம் வளர்ப்பதன் மூலம் அது குளிர் நகரமாகும் என்ற கனவுடன் புழுக்கம் நிறைந்த ஒற்றைப்படுக்கையறை வாடகை வீட்டில்இப்போது என்னால் வளர்க்கமுடிந்தது இந்த சிறிய மூங்கில் செடிதான்.

நேற்று மின்சாரம் இல்லாத அந்த தகிக்கும் இரவில் என் கைபேசியின் ஒளிரும் வெளிச்சத்தில் என் மூங்கில் மரத்தைப்பார்த்தேன். ஒருநாள் அதைத்தேடி பறவைகள் வரலாம். இந்தக்கோடையைத் தாண்டும் கொதிநிலையோடு இன்னொரு கோடை வருவதற்குள் இதன் கிளைகள் விரிந்து என் வாடகைவீட்டின் வெக்கை தணியலாம்.

அந்தச்சிறிய மூங்கில்மரத்தை அருகில் போய்ப்பார்த்தேன். அதன் மெல்லிய கூர்இதழ்கள் வாடிக் கவிழ்ந்திருந்தன. பதட்டமடைந்த நான் அதற்கு நீரூற்றலாம் என்று நினைத்தேன். இருட்டுக்குள் வியர்வையைத்துடைத்துக்கொண்டு மினரல் வாட்டர் இருக்கும் அடுப்படி நோக்கி மெல்ல நடந்தேன்.

3 Comments:

Blogger PKS said...

செழியன்,

உங்கள் வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன். இனிமையான ஆச்சரியம். வலைப்பதிவு வைத்திருக்கிறீர்கள் என்று இவ்வளவுநாள் தெரியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். - பி.கே. சிவகுமார்

November 22, 2007 at 6:37 PM  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

April 14, 2010 at 7:32 AM  
Blogger eezhavani said...

நேற்று மின்சாரம் இல்லாத அந்த தகிக்கும் இரவில் என் கைபேசியின் ஒளிரும் வெளிச்சத்தில் என் மூங்கில் மரத்தைப்பார்த்தேன். ஒருநாள் அதைத்தேடி பறவைகள் வரலாம். இந்தக்கோடையைத் தாண்டும் கொதிநிலையோடு இன்னொரு கோடை வருவதற்குள் இதன் கிளைகள் விரிந்து என் வாடகைவீட்டின் வெக்கை தணியலாம்.

அதீதம் ....... நல்லா இருக்கு, யோசிக்கவே முடியல்ல !

March 17, 2011 at 11:15 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home